Tuesday, December 9, 2014

ரஜினி நடிக்க ஆசைப்பட்ட ஜிகர்தண்டா அசால்ட் சேது

''பீட்சா'' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ''ஜிகர்தண்டா''. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனிடையே தற்போது தமிழகம் முழுக்க லிங்கா பேச்சு தான் அடிபடுகிறது. 

திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் லிங்காவை பற்றி தான் பேசி வருகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் தன் பங்கிற்கு லிங்காவை பற்றி பேசி வருகிறார். 

படம்வௌியாக இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கிறது, இரண்டு நாட்கள் தான் இருக்கிறது என்று தன் டுவிட்டர் பக்கத்தில் கவுண்ட்-டவுன் கொடுத்து வருகிறார். கூடவே தான் ரஜினியை சந்தித்த அனுபவத்தையும் தெரிவித்துள்ளார். .

''லிங்கா'' படத்தின் படப்பிடிப்பு சிமோகாவில் நடந்தபோது அங்கு ரஜினியை சந்தித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது, லிங்கா படம் ரிலீஸாக இருப்பதால் இந்த தருணத்தில் இதை சொல்ல விரும்புகிறேன். 

சிமோகாவில் லிங்கா படப்பிடிப்பு நடந்தபோது ரஜினி சாரை சந்தித்தேன். அப்போது எனது ஜிகர்தண்டா படத்தையும், எனது டீமையும் பாராட்டினார். அவரின் பாராட்டை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். 

மேலும் ஜிகர்தண்டா படத்தில் வரும் அசால்ட் சேது, கேரக்டரை தான் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சிம்ஹாவின் நடிப்பை பார்த்தபோது ''16 வயதினிலே'' படத்தில் தனது 'பரட்டை' கேரக்டர் ஞாபகம் வந்ததாகவும் தெரிவித்தார். 

இதுபோதும் தலைவா, நன்றி. இப்படியொரு சந்திப்பு நிகழ காரணமான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கருணாகரன் ஆகியோருக்கு எனது நன்றி.