Thursday, January 29, 2015

மாகாபாவுடன் ரொமன்ஸ் செய்ய தயாராகும் ஐஸ்வர்யா

சின்னத்திரை தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். 

மேலும் ‘அட்டி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அப்படத்திற்கு ‘தீபாவளி துப்பாக்கி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மாகாபா ஆனந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். 

ஐஸ்வர்யா நடிப்பில் கடைசியாக ‘திருடன் போலீஸ்’ படம் வெளியானது. ‘காக்கா முட்டை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. 

‘தீபாவளி துப்பாக்கி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையின் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கியுள்ளனர். இப்படம் குறித்த மேலும் தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

Wednesday, January 28, 2015

ஐ சக்சஸ் பார்ட்டியில் விஜய்

ஐ படத்தின் சக்சஸ் பார்ட்டியில், விஜய் கலந்துகொண்டுள்ளதன் மூலம், ஷங்கரின் அடுத்த படத்தில் ( பீகே ரீமேக்) விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஐ படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தது. படம், ரூ. 100 கோடி வசூல் செய்தது. 

இதனை உற்சாகமாக கொண்டாடும் பொருட்டு, டைரக்டர் ஷங்கர், விக்ரம், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், சக்சஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த சக்சஸ் பார்ட்டியில், ஷங்கர் மற்றும் விக்ரம் தங்களது குடும்பத்தினர்களோடு கலந்துகொண்டனர். இந்த பார்ட்டியின்போது, விக்ரமும், ஷங்கரும் மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர். 

இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான நிகழ்வாக, நடிகர் விஜய்யும்  கலந்துகொண்டது தான். அவரும், ஐ படக்குழுவினர்களோடு ஆடிப்பாடி, தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

பாலிவுட்டில் வசூலில் சாதனை படைத்த பீகே படத்தை, தமிழில் ரீமேக் செய்ய ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் அமீர் கான் கேரக்டரில் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஐ சக்சஸ் பார்ட்டியில், நடிகர் விஜய்யும் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, January 27, 2015

100வது நாளை நெருங்கும் கத்தி

2012ல் வெளிவந்த 'துப்பாக்கி' படத்தின் மூலம் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் முதன் முறையாக இணைந்தனர். 

அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து, 'கத்தி' படத்தின் மூலமும் மீண்டும் இணைந்தனர். 'கத்தி' படம் கடந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. 

வெளியீட்டுக்கு முன்னர் பல பிரச்சனைகள் எழ, 'கத்தி' படம் திட்டமிட்டபட வெளிவருமா, வராதா என்ற நிலை இருந்தது. ஒரு வழியாக அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து, திட்டமிட்டபடி படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது.

இன்னும் மூன்று நாட்களில் 'கத்தி' படம் 100வது நாளைத் தொட உள்ளது. கடந்த ஆண்டில் வெளிவந்த ஒரு படம் 2015லும் வெற்றிகரமாக ஓடி, சாதனை புரிவது சாதாரண விஷயமில்லை. 

'துப்பாக்கி' அளவிற்கு 'கத்தி' படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை என்றாலும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. 

சில ஏரியாக்களில் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் நஷ்டம் ஏற்படுத்தியது என்ற உண்மையை நாம் சொன்னாலும் விஜய் ரசிகர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 

அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய அபிமான நடிகரின் படம் 100 நாள் ஓடியது என்பதை மட்டும்தான் பார்க்கப் போகிறார்கள். வெற்றி, தோல்வி என்பதையும் மீறி 'கத்தி' படம் இத்தனை நாட்கள் ஓடியதே ஒரு சாதனைதான்.

Sunday, January 25, 2015

எஸ்.ஜே.சூர்யாவின் "இசை" 30ம் தேதி ரிலீஸ்

எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ளதோடு மட்டுமல்லாது, நடிக்கவும், இசையும் அமைத்திருக்கும் படம் இசை. இந்த படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. 

இயக்குநர், கதையாசிரியர், நடிகர் என பல்வேறு துறைகளில் கலக்கி வந்த எஸ்.ஜே. சூர்யா, இசை படத்தின் மூலம், இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இசை திரைப்படம், 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, January 23, 2015

ஒரே நேரத்தில் ஐந்து படங்கள்

இயக்குனர் லிங்குசாமி, அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பாளர்களாக இருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. 

“உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன், ரா ரா ராஜசேகர், நான்தான் சிவா” ஆகிய ஐந்து படங்களை ஒரே நேரத்தில் அவர்கள் தயாரித்து வருவது தமிழ்த் திரையுலகில் ஆச்சரியமான ஒரு விஷயம்தான். 

கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை அவர்கள் அந்த ஐந்து படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் 'உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் முடிவடைந்து வெளிவருவதற்குத் தயாராக உள்ளன. 

'உத்தம வில்லன்' படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், பாலசந்தர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 'இடம் பொருள் ஏவல்' படத்தை சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ்  மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

'ரஜினி முருகன்' படத்தை பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'ரா ரா ராஜசேகர்' படத்தை பாலாஜி சக்திவேல் இயக்க, லிங்குசாமியின் அண்ணன் மருமகன் மதி நாயகனாக நடிக்கிறார். 

ஷகிதா பானு நாயகியாக நடிக்கிறார். நான்தான் சிவா' படத்தை ஆர். பன்னீர் செல்வம் இயக்க லிங்குசாமியின் அண்ணன்  மகன் வினோத் நாயகனாக நடிக்கிறகார். 

இந்த ஐந்து படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளது. 

Wednesday, January 21, 2015

ஐ படம் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது

விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் பொங்கலன்று ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. 

பொங்கல் விடுமுறை தினங்களில் ‘ஐ’ படம் பார்க்க கூட்டம் அலை மோதியது. தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விக்ரமின் முந்தைய படங்கள் இதுபோன்று வசூல் சாதனை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ரிலீசான முதல் ஓரிரு தினங்களிலேயே ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ‘மனோகருடு’ என்ற பெயரில் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியில் இதுவரை ரூ.7 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. 

இந்த நிலையில் ‘ஐ’ படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை அவமதிப்பது போல், காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கண்டித்து இப்போராட்டத்தை நடத்துகின்றனர். 

சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி தணிக்கை குழுவிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், தணிக்கை குழு அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. திருநங்கைகள் போராட்டத்தை தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஷங்கர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tuesday, January 20, 2015

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் தல அஜீத்

‘மங்காத்தா’, ‘வீரம்’, தற்போது ‘என்னை அறிந்தால்’ என வரிசையாக அஜீத் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ‘ஸ்டண்ட்’ சில்வா மாஸ்டர். 

அப்படி என்னதான் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று அவரிடமே கேட்க, சிரிப்புடன், “அது எனக்கு தெரியலங்க, இயக்குனர் வெங்கட்பிரபு தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘மங்காத்தா’வின் சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. 

‘சிறுத்தை’ சிவாவிடம் முன்னரே பணிபுரிந்திருந்ததால் ‘வீரம்’ கிடைத்தது. அதில் ரயில் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அந்த கூட்டணியை தொடர்ந்துள்ளார் கௌதம்மேனன். அவருடனும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’ என நான்கு படங்கள் வேலை செய்துள்ளோம். அஜித்துக்கும் என்னை பிடிக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

‘என்னை அறிந்தால்’ படத்தில் எல்லா ஸ்டண்ட்டும் லைவ்வாக செய்திருக்கிறோம். அஜித் சார் ஏதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் ‘தல’ தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார். 

இந்த படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கௌதம் சார் நடிக்க சொன்னார் நடிச்சிட்டேன். இப்படத்தின் சண்டைக்காட்சிகளை சென்னையில் நிறைய ஷூட் பண்ணினோம். அஜீத் எல்லாரிடமும் அக்கறையா இருப்பார். சண்டை காட்சிகளின்போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் கொள்வார். 

சிறு தவறு செய்தாலும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார். மன்னிப்பு மற்றும் நன்றி மனிதனின் ஈகோவை குறைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார். அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவரது விடாமுயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூறமாட்டார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Monday, January 19, 2015

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் உத்தமவில்லன் பட கலைஞர்

கமலஹாசனின் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர இருக்கும் உத்தமவில்லன் படத்தில் சவுண்ட் ரி-ரிக்கார்டிங் மிக்ஸர் ஆக பணியாற்றியவர் கிரெய்க் மான், ஆஸ்கர் விருதுகளுக்கான் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

உத்தமவில்லன் படக்குழுவினர், கிரெய்க் மானிற்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். உத்தமவில்லன் படத்திற்கான சவுண்ட் ரி-ரீக்கார்டிங் பணிகளை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், கமலுடன் இணைந்து கிரெய்க் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விப்ளாஷ் படத்திற்காக, கிரெய்க் மான், ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

Saturday, January 17, 2015

ஆங்கில படத்தில் நடிக்கிறார் விஜய்

ஆங்கில படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், படத்தரப்பு அவரின் பதிலுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் விரைவில், ஒண்ணுமே புரியலை என்ற படம் வெளியாக உள்ளது. 

இந்த படத்திற்கு, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, ஹாலிவுட் பட நிறுவனம், ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. 

மேற்கு கலாச்சாரத்திற்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி அமைத்து, ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இப்படம் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் 2016-ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளது.  

இந்த படத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். நடிகர் விஜயை நடிக்க வைப்பதற்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அணுகியுள்ளனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  

Friday, January 16, 2015

ஐ (2015) - சினிமா விமர்சனம்

ஜிம் வைத்து நடத்தி வரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான எமி ஜாக்சன் மீது அதீத பிரியம். 

அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார். 

இந்நிலையில், தனது நண்பன் சந்தானம் மூலம் எமி ஜாக்சனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிட்டுகிறது. எமியை படப்பிடிப்பிற்கு சென்று சந்திக்கும் விக்ரம், அவளுடன் போட்டோ எடுத்துக் கொள்வதோடு, தனது விசிட்டிங் கார்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு திரும்புகிறார். 

இதற்கிடையே எமியுடன் இணைந்து நடிக்கும் மாடலான உபேன் பட்டேல், அவளுக்கு பாலியல் தொந்தரவு தருகிறார். இதுகுறித்து தனது குடும்ப டாக்டரான சுரேஷ் கோபியிடம் முறையிடுகிறாள் எமி. அவர், உபேன் பட்டேலை நேரடியாக எச்சரிக்கிறார். 

இதனால் கோபமடையும் உபேன் பட்டேல், தன்னுடன் ஜோடியாக நடிக்கும் விளம்பர படங்களில் இருந்து எமி ஜாக்சனை நீக்கி விடுகிறார். எமி ஜாக்சனுக்கு வேறு மாடல் யாரும் இல்லாததால் அவளுக்கு விளம்பர படங்களும் கிடைப்பதில்லை. 

அந்த வேளையில், விக்ரம் இவளிடம் கொடுத்துச் சென்ற விசிட்டிங் கார்டை பார்க்கும் எமி ஜாக்சன், அவனை தனக்கு மாடலாக உருவாக்கி அதன் மூலம் விளம்பர படங்களை பெறலாம் என்று முடிவு செய்து விக்ரமை தேடி செல்கிறாள். எமி ஜாக்சன் மீது தீவிர பற்றுடன் இருக்கும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வமாகி, தனது லட்சியத்தை விட்டுவிட்டு மாடலாக உருவாகிறார். 

விக்ரமுக்கு மேக்கப் மேனாக ஒரு திருநங்கையை நியமிக்கிறாள் எமி ஜாக்சன். திருநங்கை விக்ரமை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், விக்ரமோ எமிஜாக்சனை காதலிப்பதால், அவளது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விக்ரமை பழிவாங்க திருநங்கை காத்துக் கொண்டிருக்கிறாள். 

எமியும்-விக்ரமும் இணைந்து பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடிக்கிறார்கள். இவர்களது விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பதால், இவர்களை தேடி நிறைய விளம்பரங்கள் வருகிறது. 

ஒருநாள் பெரிய விளம்பர கம்பெனி ஒன்றை நடத்தும் ராம்குமாரின் விளம்பரத்தில் நடிக்க விக்ரம் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், விக்ரம் மீது ராம்குமார் வெறுப்பில் இருக்கிறார். இவர்களது வளர்ச்சி பிடிக்காத மாடலான உபேன் பட்டேலும் விக்ரமை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார். 

இப்படிப்பட்ட சூழலில் விக்ரமின் முகம் திடீரென அகோரமாக மாறுகிறது. இதற்கு யார் காரணம்? அவர்களை விக்ரம் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை. 

விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற முகபாவணையையும், உடல் மொழியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரமை பார்க்கும்போது, விக்ரம் தானா? என்று வியக்கும் அளவுக்கு மிக தத்ரூபமான நடிப்பை தந்திருக்கிறார். ரசிகர்களுக்கு தனது நடிப்பால் பொங்கல் விருந்தளித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

நாயகியாக வரும் எமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்றாலும், படத்தில் அது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியிலும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். 

மாடல் வில்லனாக வரும் உபேன் பட்டேல், மாடலாகவும், வில்லனாகவும் அழகாக மனதில் பதிகிறார். விளம்பர கம்பெனி அதிபராக வரும் ராம்குமாரும் வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். படம் முழுக்க நல்லவராகவே சித்தரிக்கப்படும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரம் இறுதியில் மாற்றம் ஏற்படுவது ஷங்கருக்கே உரித்தான பாணியை காட்டுகிறது. 

சந்தானம் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைத்திருக்கிறார். திருநங்கையாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் இவருடையது. அதை அசத்தலாக செய்து கைதட்டல்களை பெறுகிறார். 

இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. 

ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.

மற்றபடி, பாடல்கள், காட்சிகள், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் என அனைத்தும் ஷங்கர் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார். 

மொத்தத்தில் ‘ஐ’ ஆச்சர்யம்.

Monday, January 12, 2015

விஸ்வரூபம் 2 - மீண்டும் படப்பிடிப்பு

கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'உத்தம வில்லன், பாபநாசம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 'உத்தம வில்லன்' படம் அடுத்த மாதமும், 'பாபநாசம்' படம் கோடை விடுமுறையிலும் வெளியாகும் எனத் தெரிகிறது. 

இவற்றிற்கு அடுத்து 'விஸ்வருபம் 2' திரைப்படம் அநேகமாக தீபாவளிக்கு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 2013ம் ஆண்டே இரண்டாம் பாகத்தை வெளியிட கமல் திட்டமிட்டிருந்தார், 

ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தள்ளிப் போகப்பட்டு தற்போது இந்த ஆண்டு வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்து ஒரு படம் கூட வராத குறை இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளிவருவதன் மூலம் தீர்ந்து விடும். இதனிடையே 'விஸ்வரூபம் 2' படத்திற்காக கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்பை நடத்த உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அப்படத்திற்காக அவர் ஏற்கெனவே எடுத்த கிளைமாக்ஸ் அவருக்குப் பிடிக்கவில்லையென்றும், அதை மாற்றி புதிதாக வேறு ஒரு கிளைமாக்சை அவர் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள். 

'விஸ்வரூபம் 2' படத்தை கமல்ஹாசனே இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போலத்தான் அமைக்கப்பட்டுள்ளதாம். 

முதல் படம் போலவே இந்தப் படமும் பிரச்சனையில் சிக்காமல் தப்பிக்குமா என்பது பட வெளியீட்டின் போதுதான் தெரிய வரும்.

Sunday, January 11, 2015

அஜீத்தின், என்னை அறிந்தால் வியாபாரம் துவக்கம்

முதன்முறையாக அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். 

மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம் மேனன் கூட்டணியில் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக உருவாகி வந்த இப்படம் இந்த பொங்கலுக்கு வௌிவருவதாக இருந்தது. 

ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தேதி ஜன. 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே என்னை அறிந்தால் படத்திற்கான வியாபாரம் துவங்கியுள்ளது. 

தமிழகத்தில் இப்படத்தை எம்.கே. என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் வௌியிடுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே சமர் படத்தை வௌியிட்டுள்ளது. 

கேரள உரிமையை எம்ஜி நாயரும், கர்நாடக உரிமையை காவேரி தியேட்டர்ஸும் பெற்றுள்ளன. 

வௌிநாடுகளுக்கான உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது. அனைத்து ஏரியாக்களிலும் அதிக விலைக்கு அஜீத்தின் படம் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, January 9, 2015

ஐ - பிரச்னை தீர்ந்தது - திட்டமிட்டபடி ஜன., 14ம் தேதி படம் ரிலீஸ்

ஐ படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது, இதனையடுத்து திட்டமிட்டபடி படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸாகிறது. 

ஆஸ்கர் பிலிம், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமி நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பிரமாண்டமாக உருவாகி வந்த படம் ஐ. 

இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி ரிலீஸாக இருந்தது. இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென நேற்று இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் ஆஸ்கர் ரவிச்சந்திரன், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட், 3வார காலத்திற்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதித்து இருந்தது. 

மேலும் இதுதொடர்பாக ஜன. 30ம் தேதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தரும்படியும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் சுமூகமாக பேசி தீர்த்துள்ளனர். 

இதனையடுத்து படம் வௌியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், திட்டமிட்டபடி ஐ படம் ஜன.,14ம் தேதி ரிலீஸாகும் என ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Wednesday, January 7, 2015

அனேகன் தாமதம் - கடுப்பான தனுஷ்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் பாடல்கள் வெளிவந்து பல வாரங்களாகின்றன. அவற்றில் டங்கா மாரி சோமாரி என்ற பாடல் ஹிட்டாகியும் உள்ளது. 

நான்கு வித தோற்றங்களில் தனுஷ் நடித்த காட்சிகளுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் வெளிவந்து ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, அனேகன் படம் சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழும் வாங்கிவிட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது. எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை.

கடந்த வருட தீபாவளிக்கே அனேகன் படம் வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது. லிங்காவுக்காக வழிவிட்டு ஒதுங்கியது. பிறகு பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. 

அனேகன் இப்போது பொங்கல் ரேஸிலும் இல்லை. அது மட்டுமல்ல ஜனவரி ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலில் கூட இல்லை. சென்சார் செய்யப்பட்ட பிறகு அனேகன் படத்தை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்?

ஐ படத்தின் சென்னை, செங்கல்பட்டு உரிமையை அனேகன் தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவனத்தார் வாங்கியிருப்பதுதான் முதல் காரணம். 

தற்போது அவர்களின் முழுக்கவனமும் ஐ பட வெளியீட்டில் இருப்பதால், அப்படம் வெளியாகி சில வாரங்களுக்குப் பிறகே அனேகன் படத்தை ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கேள்வி.

ஐ படம் வெளியான சில நாட்களில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வெளியாக உள்ளது.  அந்தப்படத்துக்கு போட்டியாக இறக்கினால் அனேகன் படம் காணாமல்போய்விடும் என்ற அச்சத்தில் இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. 

தான் நடித்த படம் மற்ற ஹீரோக்களின் படத்துக்காக வழிவிட்டு ஒதுங்கி நிற்பதை அனேகன் படத்தின் ஹீரோவான தனுஷ் விரும்பவில்லையாம்... 

இது குறித்து ஏஜிஎஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனாவுக்கு போன்போட்டு காய்ச்சி எடுத்துவிட்டாராம் தனுஷ்.

Monday, January 5, 2015

மீண்டும் உயிர் பெறுகிறதா இது நம்ம ஆளு?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படம் ட்ரராப்பாகிவிட்டதாக படத்துறையில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

அதை உண்மையாக்கவதுபோல், இது நம்ம ஆளு படத்தின் நாயகனான சிம்பு வெளிநாட்டுக்குக் கிளம்பிப்போனார். நாயகி நயன்தாராவோ வேறு சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார். 

இது நம்ம ஆளு படத்தின் இயக்குநரான பாண்டிராஜும் சூர்யாவின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இதை எல்லாம் வைத்து இது நம்ம ஆளு படம் ட்ராப்பானதாக சொல்லப்பட்டு வந்தநிலையில் தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பி உள்ளார் சிம்பு.

அவர் வந்திறங்கியதும் மீண்டும் இது நம்ம ஆளு படம் பற்றிய தகவல்கள் அடிபட ஆரம்பித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் நடந்து விட்டால் மொத்த படமும் முடிந்து விடுமாம். 

இதுவரை எடுத்தது வரையிலான காட்சிகளின் டப்பிங் உட்பட அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துள்ளாராம் பாண்டிராஜ். 

எனவே இப்படத்தின் டீஸரை பொங்கல் அன்று வெளியிட திட்டமிட்டுள்ள பாண்டிராஜ் ஏப்ரல் மாதத்துக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம். இப்படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார்.

Sunday, January 4, 2015

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா பி.வாசு

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘லிங்கா’. இப்படத்தின் வெற்றி ரஜினியை மகிழ்ச்சியடைய செய்திருந்தாலும், இப்படத்தின் வசூல் சர்ச்சை அவரை ரொம்பவும் கலக்கமடையவே செய்திருக்கிறது. 

இப்படத்தை தொடர்ந்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தன.

இதில் ரஜினியுடன், பாலிவுட் நடிகர் அமீர்கானும் இணைந்து நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த செய்திகள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

ஏற்கெனவே, பி.வாசு-ரஜினி கூட்டணியில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், ‘பாபா’ என்ற தோல்வி படத்திற்கு பிறகு தனது ‘சந்திரமுகி’ படம் மூலம் ரஜினிக்கு மெகா ஹிட் கொடுத்தது தமிழ் சினிமாவில் அவருக்கு ரீ-என்ட்ரி அமைத்துக் கொடுத்தவர் பி.வாசு. தற்போது, மீண்டும் இருவரும் இணையப் போவதாக வெளிவந்துள்ள செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. 

பி.வாசு சொன்ன கதை பிடித்துப் போய் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, January 3, 2015

மணிரத்னம் இயக்கும் அலைபாயுதே 2–ம் பாகம்

மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி படம் அலைபாயுதே படத்தின் 2–ம் பாகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

‘அலைபாயுதே’ படம் 2000–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. மாதவன், ஷாலினி ஜோடியாக நடித்து இருந்தனர். மணிரத்னம் இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். 

இதில் இடம் பெற்ற ‘பச்சை நிறமே பச்சை நிறமே’, ‘சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே’, ‘யாரோ யாரோடி’, ‘எவனோ ஒருவன்’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ‘ஒகே கண்மணி’ என்ற பெயரில் மணி ரத்னம் படமாக்குகிறார். இந்த தகவலை படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்து உள்ளார். 

அவர் கூறும்போது, ‘‘ஓகே கண்மணி படத்தை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். ஆனாலும் இந்த படத்தின் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய கால கட்டத்தில் ஏற்றார் போல் கதை இருக்கும். 

சிறந்த காதல் கதை’’ என்றார். ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்சர் சல்மான், நித்யாமேனன் ஜோடியாக நடிக்கின்றனர். தமிழ், மலையாளத்தில் தயாராகிறது. இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமானே இசையமைக்கிறார்.

Friday, January 2, 2015

இந்தியிலும் சக்கபோடு போடும் மெர்சலாயிட்டேன்

ஷங்கரின் இயக்கத்தில், விக்ரமின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐ படத்தை இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. 

மூன்று வருடமாக உருவாகி வந்த இப்படம், வருகிற ஜன. 9ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் ஐ படம் ரிலீஸாக இருக்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் இந்தியா அளவில் சாதனை படைத்துள்ளது. மேலும் ஐ படத்திலிருந்து மெர்சலாயிட்டேன் என்ற பாடலின் வீடியோவும் வௌியிடப்பட்டுள்ளது. 

தமிழ் மட்டுமல்லாது, இந்தியிலும் இப்பாடல் வௌியாகியுள்ளது. தமிழை போலவே இந்தியிலும் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இஷாக் தாரி என்ற அந்த பாடல் வௌியான சில தினங்களிலேயே சுமார் 4 லட்சம் பேர் இந்தபாடலை ரசித்துள்ளனர். தொடர்ந்து ஏராளமானபேர் இப்பாட்டில் மூழ்கி போய் உள்ளனர்.

Thursday, January 1, 2015

இந்தாண்டு தல பொங்கல் இல்லை - தள்ளிப்போனது என்னை அறிந்தால்

அஜீத் ரசிகர்களுக்கு, இந்த புத்தாண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது. 

அதாவது, இன்று(ஜனவரி 1ம் தேதி) என்னை அறிந்தால் படத்தின் டிரைலரும், பாடல்களும் வௌியாகி, அஜீத் ரசிகர்கள் புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வரும் வேளையில் பொங்கலுக்கு, என்னை அறிந்தால் படம் வௌிவராது என்ற தகவலை சொல்லி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

முதன்முறையாக அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டீசர் வௌியாகி ரசிகர்கள் இடத்தில் மாஸ் வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் இன்று(ஜன 1ம் தேதி) என்னை அறிந்தால் படத்தின் மொத்த பாடல்களும், படத்தின் டிரைலரும் வௌியிடப்பட்டது. பாடல்கள் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

அஜீத் ரசிர்கள் இந்த புத்தாண்டை டபுள் சந்தோஷமாக கொண்டாடினர். இப்படம் பொங்லுக்கு வௌிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படம் பொங்கலுக்கு வௌியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்த போதிலும், போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் படத்தை ஜனவரி 29ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். 

இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரேநாளில் என்னை அறிந்தால் படம் ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் மாதம் பொங்கல் ரேஸில் விக்ரமின் ஐ, அஜீத்தின் என்னை அறிந்தால், விஷாலின் ஆம்பள, கார்த்தியின் கொம்பன், சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை என ஐந்து படங்கள் போட்டி போட்டன, ஆனால் இப்போது, ஐ, ஆம்பள மற்றும் கொம்பன் படங்கள் மட்டுமே ரேஸில் உள்ளன.