Thursday, June 30, 2016

ஆகஸ்ட்டில் துவங்குகிறது கமலின் அடுத்த ஆக்ஷ்ன் படம்



கமல்ஹாசனுக்கு ஒரு காலத்தில் சந்தானபாரதி ஆல் இன் ஆலாக இருந்தார். அதன் காரணமாகவே அவருக்கு அவ்வப்போது தான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பையும் வழங்கினார் கமல். அன்றைய சந்தானபாரதியின் இடத்தை தற்போது நிரப்பியவர் ராஜேஷ் எம்.செல்வா. பல வருடங்களாக கமலிடம் உதவியாளராக இருந்த இவரை 'தூங்காவனம்' படத்தில் இயக்குநராக்கினார் கமல்.

அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. எனவே சோர்ந்துபோன ராஜேஷ் எம்.செல்வாவை அழைத்த கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் எக்ஸிக்யூட்டீவ் புரொட்யூஸராக பணிபுரிய வைத்தார். கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்சில் நடந்து முடிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை கமல்ஹாசனே இயக்கி வருகிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிந்து விடும். 'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜேஷ் எம்.செல்வா. ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள இப்படம் ஆக்ஷ்ன் பாணியில் உருவாகவிருக்கிறதாம்.