Monday, April 6, 2015

வந்தாச்சு - உத்தமவில்லனுக்கும் பிரச்னை வந்தாச்சு

கமல் நடித்துள்ள, ''உத்தம வில்லன்'' படத்தை தடை செய்ய கோரி விஷ்வ இந்து பரீஷத் சார்பில், சென்னை கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடித்துள்ள படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில், கமல் உடன் ஆண்டரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராமன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் என... ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை வௌியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. படம் இம்மாதம் ஏப்ரலில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு தடை கோரி சென்னை, கமிஷனரிடம், விஷ்வ இந்து பரீஷத்தின் சென்னை அமைப்பாளர் சத்யமூர்த்தி என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது, உத்தம வில்லன் படத்தில் பெருமாளின் அவதாரங்களை கொச்சைப்படுத்துவது போன்று வசனங்கள் உள்ளன. பக்த பிரகலாதன் மற்றும் அவரது தந்தை இரணியனின் உரையாடல்களை, உதிரத்தின் கதை என்று வில்லுப்பாட்டாக படத்தில் சேர்த்துள்ளனர். 

தன்னை எப்போதும் இந்து மதத்தை எதிர்க்கும் நாத்திகனாக காட்டிக்கொள்ளும் கமல், இந்து கடவுளை விமர்சித்து இருப்பது, இந்துக்கள் மனதை புண்படுத்துவது போன்று உள்ளது. எனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு சத்யமூர்த்தி தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் கார்த்தி நடித்த கொம்பன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இப்போது கமலின், உத்தமவில்லன் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமலின் படங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது இது ஒன்றும் முதல்முறையல்ல... ஏற்கனவே சண்டியர்(விருமாண்டி), விஸ்வரூபம் என பல படங்களுக்கு பிரச்னை உருவானது குறிப்பிடத்தக்கது.