ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘லிங்கா’. இப்படத்தின் வெற்றி ரஜினியை மகிழ்ச்சியடைய செய்திருந்தாலும், இப்படத்தின் வசூல் சர்ச்சை அவரை ரொம்பவும் கலக்கமடையவே செய்திருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தன.
இதில் ரஜினியுடன், பாலிவுட் நடிகர் அமீர்கானும் இணைந்து நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த செய்திகள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏற்கெனவே, பி.வாசு-ரஜினி கூட்டணியில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், ‘பாபா’ என்ற தோல்வி படத்திற்கு பிறகு தனது ‘சந்திரமுகி’ படம் மூலம் ரஜினிக்கு மெகா ஹிட் கொடுத்தது தமிழ் சினிமாவில் அவருக்கு ரீ-என்ட்ரி அமைத்துக் கொடுத்தவர் பி.வாசு. தற்போது, மீண்டும் இருவரும் இணையப் போவதாக வெளிவந்துள்ள செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது.
பி.வாசு சொன்ன கதை பிடித்துப் போய் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.