Tuesday, January 20, 2015

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் தல அஜீத்

‘மங்காத்தா’, ‘வீரம்’, தற்போது ‘என்னை அறிந்தால்’ என வரிசையாக அஜீத் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ‘ஸ்டண்ட்’ சில்வா மாஸ்டர். 

அப்படி என்னதான் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று அவரிடமே கேட்க, சிரிப்புடன், “அது எனக்கு தெரியலங்க, இயக்குனர் வெங்கட்பிரபு தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘மங்காத்தா’வின் சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. 

‘சிறுத்தை’ சிவாவிடம் முன்னரே பணிபுரிந்திருந்ததால் ‘வீரம்’ கிடைத்தது. அதில் ரயில் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அந்த கூட்டணியை தொடர்ந்துள்ளார் கௌதம்மேனன். அவருடனும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்’ என நான்கு படங்கள் வேலை செய்துள்ளோம். அஜித்துக்கும் என்னை பிடிக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 

‘என்னை அறிந்தால்’ படத்தில் எல்லா ஸ்டண்ட்டும் லைவ்வாக செய்திருக்கிறோம். அஜித் சார் ஏதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் ‘தல’ தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார். 

இந்த படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கௌதம் சார் நடிக்க சொன்னார் நடிச்சிட்டேன். இப்படத்தின் சண்டைக்காட்சிகளை சென்னையில் நிறைய ஷூட் பண்ணினோம். அஜீத் எல்லாரிடமும் அக்கறையா இருப்பார். சண்டை காட்சிகளின்போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் கொள்வார். 

சிறு தவறு செய்தாலும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார். மன்னிப்பு மற்றும் நன்றி மனிதனின் ஈகோவை குறைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார். அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவரது விடாமுயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூறமாட்டார். 

இவ்வாறு அவர் கூறினார்.