Wednesday, April 9, 2014

கத்தி பட சர்ச்சை - தப்பித்த சூர்யா, மாட்டிக்கொண்ட விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

இந்நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற தகவல் தினம்தினம் புதுப்புதுஆதாரங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

இப்படி வெளியாகும் செய்திகளினால் செம டென்ஷனில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நெருக்கடி உருவாகி இருக்கிறது. இலங்கையின் மருமகன் என்று இலங்கைத் தமிழர்களால் கொண்டாட்டப்பட்ட விஜய் பணத்துக்காக லைகா மொபைல் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்தது உலகத்தமிழர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கி உள்ளது.

கத்தி படம் தொடர்பாகவும், லைகா மொபைல் நிறுவனம் தொடர்பாகவும் ஏற்பட்ட தற்போதைய சர்ச்சைகளைக் கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு முன்னணி ஹீரோ. அவர்..சூர்யா.

லைகா மொபைல் நிறுவனம் முதன்முதலில் அணுகியதே சூர்யாவைத்தான். அவர் வாங்கும் சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் தருவதாக ஆசைக்காட்டி கால்ஷீட் கேட்டிருக்கிறது. 

எந்தவொரு நிறுவனத்துக்கும் கால்ஷீட் கொடுப்பதற்கு முன் அந்த நிறுவனத்தின் பின்னணியை விசாரித்து, அதன் பிறகே முடிவு செய்வாராம் சூர்யா. 

அதன்படி லைகா மொபைல் பற்றி விசாரித்தபோது, அந்நிறுவனம் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற விவரம் தெரிய வர, லைகா நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டாராம். 

சூர்யா மறுத்த பிறகே விஜய்யைத் தேடிப்போய் புக் பண்ணி இருக்கின்றனர். இதை எல்லாம் எண்ணியபடி, கத்தி படம் தொடர்பாக நடக்கும் பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறாராம் சூர்யா.