Thursday, November 13, 2014

அடை மழையிலும் நாளை 8 படங்கள் ரிலீஸ்

தமிழ்நாடு முழுவதும் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் நாளை (நவ 14) 8 படங்கள் ரிலீசாகிறது. 

நாளை ரிலீசாகும் திருடன் போலீஸ், அப்புச்சி கிராமம், புலிப்பார்வை, ஞானகிறுக்கன், முறுகாற்றுப்படை, விலாசம் போன்ற படங்கள் மீடியம் பட்ஜெட் படங்கள். அன்பென்றாலே அம்மா, சிறு முதலீட்டு படம். உளவுக்கன்னி - ஆங்கிலப் படம்.

அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா நடித்திருக்கும் திருடன் போலீஸ் அப்பா மகன் உறவை சொல்லும் படம். புலிபார்வை இலங்கை போரில் கொல்லப்பட்ட விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கதை. 

உலகம் அழியப்போவதாக நினைத்துக் கொண்டு ஒரு கிராமத்தில் நடக்கும் கலாட்டாக்கள் அப்புச்சி கிராமத்தின் கதை. அநாதையாக பிறந்த ஒருவன் தன் பெற்றோரை தேடிச் செல்வது விலாசத்தின் கதை, கிராமத்தில் வறுமை காரணமாக சென்னைக்கு வந்து இங்கும் வாழ போராடும் இளைஞனின் கதை ஞானக்கிறுக்கன், ரியல் எஸ்டேட் தாதாக்களின் கதை முறுகாற்றுப்படை.

எல்லா படங்களுமே சராசரியாக 50லிருந்து 100 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. அன்பென்றாலே அம்மா என்ற படம் மட்டும் திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, முக்கூடல் ஆகிய இடங்களில் தலா ஒரு தியேட்டரில் ரிலீசாகிறது.

அடைமழை பெய்தாலும் இப்படி ரிலீஸ் மழை பொழியக் காரணம் லிங்கா. சூப்பர் ஸ்டாரின் லிங்கா டிசம்பர் 12 வெளிவருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

அடுத்து பொங்கலுக்கு கமல் படங்களில் ஒன்று கட்டாயம் ரிலீசாகும். எனவே சிறு பட்ஜெட் படங்கள் இந்த நேரத்தை தவிர விட்டால் பிப்ரவரி மாதமே வெளியிட முடியும். அதனால்தான் வரிசை கட்டி படங்கள் ரிலீசாகிறது.