Monday, June 30, 2014

நடிப்புக்காக ரூ.11 சம்பளம் வாங்கிய இயக்குனர்

இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். 'பாம்பே வெல்வெட்' என்ற படத்தில் நடித்ததற்காக வெறும் 11 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். 

இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளமே வேண்டாம் என்று சொன்னாராம். 

ஆனால், நட்பின் அடையாளமாக கரணுக்கு 11 ரூபாய்க்கான பிரம்மாண்டமான ஒரு செக்கை வழங்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் கரண் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான விகாஸ் பாஹ்ல் கூறும் போது,
“இந்த படத்திற்காக அவர் சம்பளம் எதையும் பெறவில்லை. இந்த படத்தில் நடிப்பது அவருக்கு மிகப் பெரும் ஆர்வமாக இருந்தது. எங்களது மொத்தக் குழுவுமே அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். 

இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதித்ததற்கு மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். 

அதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு நடிகராக எங்கள் படத்தில் அவர் அறிமுகமாவது எங்களுக்குப் பெருமைதான், ” என்கிறார்.

கரண் ஜோஹர் இதற்கு முன் 'தில்வாலே துஹானியா லே ஜாயங்கே, லக் பை சான்ஸ்' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். 

'பாம்பே வெல்வெட்' திரைப்படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் படம். ரண்பீர் கபூர், அனுஷ்கா சர்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளிவர உள்ளது.