Monday, September 14, 2015

வெற்றிக்காகக் காத்திருக்கும் விஜய் சேதுபதி

2012ம் ஆண்டு 'பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மூலம் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார் விஜய் சேதுபதி. 

அடுத்து 2013ம் ஆண்டில் வெளிவந்த 'சூது கவ்வும்' படமும் வெற்றிகரமாக அமைய விஜய் சேதுபதியின் இமேஜ் அப்படியே வானுயர உயர்ந்தது. அதற்கடுத்து வந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களை அள்ளிக் கொடுத்தது. 

அதன் பின் யார் கண் பட்டதோ தெரியவில்லை, தொடர்ந்து சறுக்கிக் கொண்டேயிருக்கிறார் விஜய் சேதுபதி.

கடந்த ஆண்டில் வெளிவந்த “ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம்”, இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த “புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்'' ஆகிய ஐந்து படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து அவருடைய வெற்றிப் பயணத்திற்கு தடைக் கற்களாக அமைந்தன. 

ஆனால், விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவர இருக்கும் ஒவ்வொரு படங்களும் மீண்டும் அவரை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் அளவிற்கு உருவாகி வருவதாக அந்தப் படங்களின் இயக்குனர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். 

“நானும் ரெளடிதான், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, நலன் குமாரசாமியின் படம், இறைவி” ஆகிய படங்கள் விஜய் சேதுபதிக்கு நம்பிக்கை தரும் படங்களாகவே இருக்கின்றன. 

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'மெல்லிசை' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. இனி, விஜய்சேதுபதி மெல்ல மெல்ல மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.