ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் என பல தரமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்டத்துக்கு பேர் போன அவர், ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் என்ற இரண்டு மெகா படங்களை இயக்கினார்.
அதையடுத்து, விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கினார். அந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சென்னைக்கு வரவைத்தும் பரபரப்பு கூட்டினார்.
இந்த நிலையில், ஷங்கரின் அடுத்த படத்தில் நடிப்பது யார்? அது என்ன படம்? என்பது குறித்து அவர்தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால், அடுத்து அவர் மூன்றாவது முறையாக மீண்டும் ரஜினியுடன் எந்திரன்-2 படம் மூலம் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டு வந்தன. ஆனால் அப்படி வந்து கொண்டிருந்தபோதே, கபாலியில் ரஜினி நடிக்கும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டன.
ஆனால், தற்போது எந்திரன்-2 படத்தை எந்திரனை விடவும் பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருக்கும் ஷங்கர், அப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார்.
இதற்காக சில ஹாலிவுட் டெக்னீசியன்கள் மற்றும் அனிமேஷன் டெக்னீசியன்களுடன் அவர் முதல்கட்ட வேலைகளை தொடங்கியிருக்கிறார். ஆக, கபாலி படத்துக்கு 60 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ள ரஜினி, அந்த படத்தை இந்த ஆண்டுக்குள் முடித்து விடுவார் என்று தெரிகிறது.
அதனால், எந்திரன்-2 படத்தின் அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியிடப்பட்டு, ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் கசிந்துள்ளன.