2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பாக்ஸ்ஆபிசில் வெற்றிப்படங்கள் இல்லை.
சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்தார் தனுஷ்.
ஜூலை 18ஆம் தேதி வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி தனுஷுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
வேலையில்லா பட்டதாரி படத்திற்கு உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததன் காரணமாக, படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே சுமார் 15 கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது.
உலகளவில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்ததினால் விஐபியின் முதல் வார வசூல் 20 கோடிகளைத் தொட்டது. முதல் வாரம் மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த வாரமும் விஐபியின் வசூல் குறையவில்லை.
ஜிகர்தண்டா படத்தை தள்ளிப்போட வைத்ததால், வேறு எந்த பெரிய படமும் அப்போது ரிலீஸாகவில்லை. எனவே போட்டியில்லாமல்போய் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலைக் குவித்தது.
மூன்றாவது வாரத்தில் ஜிகர்தண்டா படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதால், விஐபியின் வசூல் கொஞ்சம் குறைந்தாலும் பெரிய பாதிப்பில்லை.
தற்போதைய சூழலில் மூன்றாவது வாரத்திற்கு மேல் எந்த ஒரு படமும் தாக்குப்பிடிப்பதில்லை என்ற சூழலில் தற்போது 25 நாட்களை எட்டியுள்ளது விஐபி.
தமிழகம் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உட்பட வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு! தனுஷ் நடித்த படங்களிலேயே வெளிநாட்டில் முதல் முறையாக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது விஐபி படத்துக்குத்தான்.
25 நாட்களில் உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது விஐபி. தனுஷ் படங்களிலேயே அதிக அளவில் வசூல் செய்திருக்கும் படம் என்ற பெருமை வேலையில்லா பட்டதாரி படத்துக்குக் கிடைத்திருக்கிறது.